@ANI
சினிமா

திரையரங்குகளில் 24*7 படங்கள்: திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் படங்களைத் திரையிட அனுமதி வழங்கப்பட வேண்டும்.

யோகேஷ் குமார்

தமிழ்ப் படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்த அறிக்கையில்:

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று (செப். 24) காலை 11 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு

1. பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதற்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் திரையிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

2. தமிழ்ப் படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும்.

3. சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

அரசாங்க கவனத்திற்கு

1. திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம்.

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ. 250 வரையும்

ஏசி திரையரங்குகளுக்கு ரூ. 200 வரையும்

ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

2. நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் படங்களைத் திரையிட அனுமதி வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள் நஷ்டமின்றி நடத்த முடியும். நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.