படங்களைப் பதிவு செய்தது குறித்து தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகும் படங்களை, திரையரங்குகளில் வெளியாகும் முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்யும் தளம் தமிழ் ராக்கர்ஸ். இதனால், படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான வேட்டையன் மற்றும் மலையாளத்தில் வெளியான ஏஆர்எம் போன்ற படங்களைத் திரையரங்குகளில் அமர்ந்து பதிவு செய்ததாக, குமரேசன் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இரு தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகிகளை கொச்சி சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடன் நடத்திய விசாரணையில் படங்களைப் பதிவு செய்தது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:
முக்கியமானப் படங்கள் வெளியாகும்போது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வகையிலான ரிக்ளைனர் சீட்டுகள் கொண்ட திரையரங்குகளில் நடுவரிசையில் வரிசையாக 5 இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்வோம். அதில், நடுவில் உள்ளவர் போர்வையால் தன்னை மூடிக்கொண்டு அதற்குள் கேமராவைப் பொருத்தி படத்தைப் பதிவு செய்வார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.