தயாரிப்பாளர் சிவா வருத்தம் 
சினிமா

தமிழ்ப் படங்களின் வசூல் மோசமாக உள்ளது: தயாரிப்பாளர் சிவா வருத்தம்

"விமர்சனம் என்ற பெயரில் ஒரு படத்தை கொலை செய்யாதீர்கள்".

யோகேஷ் குமார்

தமிழ்ப் படங்களின் வசூல் மிகவும் மோசமாக உள்ளதாக தயாரிப்பாளர் டி. சிவா பேசியுள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் உட்பட பலர் நடித்த படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன் இயக்குநர் சசி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய சிவா, “படங்களை விமர்சிப்பவர்கள் தரம் தாழ்த்தி பேச வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“தமிழ்ப் படங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. முன்பு, ஒரு படம் ரூ. 20 கோடி வசூல் செய்தால், அப்படம் டிஜிட்டலையும் அதே தொகைக்கு விற்கப்படும். ஆனால் தற்போது ஒரு படம் ரூ. 20 கோடி வசூல் செய்தால், அப்படம் டிஜிட்டலில் ரூ. 3 கோடிக்கே விற்கப்படுகிறது.

படங்களை விமர்சிப்பவர்கள் திரையரங்குகளுக்கே வரவேண்டாம் எனத் தரம் தாழ்த்தி பேசாமல், பொறுப்புணர்ந்து பேச வேண்டும். விமர்சனம் என்ற பெயரில் ஒரு படத்தை கொலை செய்யாதீர்கள். திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒரு படம் வெற்றி பெற தயாரிப்பாளரே முக்கியமான காரணம். ஒரு படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர் மட்டும் வெற்றி பெற்றதாக அர்த்தம் இல்லை, ஒட்டுமொத்த படக்குழுவினரும் வெற்றி பெறுவார்கள். எனவே படத்தை விமர்சனம் செய்பவர்கள் இனி பொருப்புணர்ந்து பேசுங்கள்” என்றார்.