லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் திராவிட இயக்கத் தலைவர் சுப. வீரபாண்டியன் நடிப்பதாக அறிவுப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் பத்திரிகையாளர் சி.என் லக்ஷ்மிகாந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு மிகவும் பிரபலமடைந்தது. அப்போதைய உச்ச நட்சத்திரங்களாக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகிய இருவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். இந்தப் பின்னணியைக் கொண்டு இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படம் உருவாகி வருகிறது.
இவர் கன்னடத்தில் 19 படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியவர். தமிழில், வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘கொன்றால் பாவம்’ மற்றும் ஆரவ் நடித்த ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரது அடுத்த படமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 5 அன்று சென்னையில் தொடங்கியது.
இந்தப் படத்தை 2எம் சினிமாஸ் கே.வி. சபரீஷ் தயாரிக்கிறார்.எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை தயாள் பத்மநாபனுடன் இணைந்து கவிதா பாரதி எழுதியுள்ளார். இதில், ஜீவி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரிகிடா இணைந்துள்ளார். மேலும், ரங்கராஜ் பாண்டே, லிஸ்ஸி ஆண்டனி, சரவணன், கவிதா பாரதி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இதற்கிடையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திராவிட இயக்க தலைவர் சுப. வீரபாண்டியன் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேடைகளை அதிர வைத்த பேச்சாளர் சுப. வீரபாண்டியன் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் திரையையும் அதிர வைக்கப்போகிறார் என்று சினிமா பிஆர்ஓ ரமேஷ் பாலா பகிர்ந்துள்ள எக்ஸ் தளப் பதிவை இயக்குநர் தயாள் பத்மநாபன் மறுபகிர்வு செய்துள்ளார்.
Dravidian Movement leader Suba Veerapandian joins the film Laxmikanthan Murder Case getting a main role.