4 மணி நேர படம் எடுக்க தனி தைரியம் வேண்டும்: துரந்தர் 2-க்கு ராஜமௌலி புகழாரம் https://x.com/AdityaDharFilms
சினிமா

4 மணி நேர படத்தை எடுத்து வெளியிட தைரியம் வேண்டும்: துரந்தர் 2-க்கு ராஜமௌலி புகழாரம் | Dhurandhar: The Revenge |

படத்தில் கடத்தப்பட்டிருக்கும் உணர்ச்சிகளின் அடர்த்தி, படத்தை மனதில் அழுத்தமாக நிலைநிறுத்துகிறது.

கிழக்கு நியூஸ்

நான்கு மணி நேரம் நீளமுள்ள படம் என்றாலும் கடைசிக் காட்சி வரை பார்வையாளர்களை இருக்கையில் ஒட்ட வைத்த படம் என்று துரந்தர் 2 படத்தை இயக்குநர் ராஜமௌலி புகழ்ந்துள்ளார்.

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்ளிட்டோர் நடித்த துரந்தர் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று வெளியானது. பாகிஸ்தான் தீவிரவாத குழுவுக்குச் செல்லும் ஓர் இந்திய உளவாளியின் கதையாக அமைந்த இப்படம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் ரூ. 1,300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே அதன் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவெஞ்ச் படம் கடந்த மார்ச் 19 அன்று வெளியானது.

தமிழில் இன்று வெளியீடு

தொழில்நுட்பம் மற்றும் தணிக்கை பிரச்னை காரணமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படம் வெளியாவதில் சிக்கல் இருந்த நிலையில், இன்று தென்னிந்திய மொழிகளிலும் படம் வெளியானது. இதையடுத்து படத்தைப் பார்த்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நான்கு மணி நேரம் நீளமுள்ள படம் என்றாலும் கடைசிக் காட்சி வரை பார்வையாளர்களை இருக்கையில் ஒட்ட வைத்த படம் என்று புகழ்ந்துள்ளார்.

இயக்குநர் ராஜமௌலி புகழாரம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

“நான் துரந்தர் முதல் பாகத்தை மிகவும் ரசித்தேன். ஆனால், இரண்டாம் பாகம் முதலாவதை விட அளவிலும் ஆழத்திலும் மீறிவிட்டது. எழுத்து, நடிகர் தேர்வு, தொழில்நுட்பத் தரம், இசை, வடிவமைப்பு, இயக்கம் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. படத்தில் கடத்தப்பட்டிருக்கும் உணர்ச்சிகளின் அடர்த்தி, படத்தை மனதில் அழுத்தமாக நிலைநிறுத்துகிறது. பல்வேறு திருப்பங்கள் கொண்ட திரைக்கதை எழுத்து, உணர்ச்சியால் நிரம்பிய உண்மையான பதற்றத்தை அற்புதமாக காட்டியிருக்கிறது.

இயக்குநர் ஆதித்யா தார், மிகப் பெரிய அடியை வைத்திருக்கிறீர்கள். நான்கு மணி நேர நீளமுள்ள படத்தை எடுத்து வெளியிட தைரியம் வேண்டும். பார்வையாளர்கள் கடைசி காட்சி வரை இருக்கையில் ஒட்டிக்கொண்டிருந்தனர்.

கதாநாயகன் ரன்வீர், என்ன ஒரு நடிப்பு. தொடக்கத்தில் சகோதரியுடன் இருக்கும் காட்சியின் நடிப்பு மாஸ்டர் கிளாஸ். படத்தின் தொடக்கத்தில் இருந்து, இதயத்தை நொறுக்கும் இறுதிக் காட்சி வரை ஹம்சாவாகவும் ஜஸ்கீரத்தாகவும் எங்களை மெய்மறக்கச் செய்துவிட்டீர்கள்.

நடிகர் மாதவன், ஒரு நாட்டின் உதவியற்ற தன்மையையும் விரக்தியையும் அழகாகவும் ஆழமாகவும் சுமந்தீர்கள். உங்களது வெற்றியை எங்கள் வெற்றிபோல் உணர்ந்தோம்.துரந்தர் குழுவில் உள்ள அனைவருக்கும் அமோகமான வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

SS Rajamouli Reviews Dhurandhar 2: 'Aditya Hit It Out Of The Park, Ranveer's Masterclass In Acting'