வீர தீர சூரன் படத்தின் இயக்குநர் எஸ்.யு. அருண் குமாரை எஸ்.ஜே. சூர்யா பாராட்டியுள்ளார்.
விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனப் பெயரிடப்பட்டது.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.
முன்னதாக எஸ்.யு. அருண் குமார், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கினார்.
‘வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அருண் குமாரை பாராட்டி எஸ்.ஜே. சூர்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“வீர தீர சூரன் படத்தின் க்ளைமாக்ஸூக்கு முந்தைய காட்சிகளின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றது. நானும் விக்ரம் மற்றும் சிராஜ் ஆகியோரும் அந்த காட்சியில் நடித்தோம்.
முன்னதாக, அருணும், அவரது உதவி இயக்குநர்களும் சேர்ந்து அந்த காட்சியை கிட்டத்தட்ட 10 நாள்களாக பயிற்சி செய்தனர்.
அதன் பின்னர் எங்களை வரவழைத்து 3 இரவுகள் அந்த காட்சிக்கான ஒத்திகையை நடத்தினார். அந்த காட்சியின் படப்பிடிப்பு சிறப்பாக முடிந்தது.
ஒரு வார்த்தையில் அருண் குமாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கலைதாயின் இளையமகன் அய்யா நீர்” என்றார்.