விஜய் அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என சசிகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் படம் கடந்த செப். 5 அன்று வெளியானது. இப்படத்துக்கு பிறகு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக விஜய் அறிவித்தார்.
இயக்குநர் ஹெச். வினோத் விஜயின் 69-வது படத்தை இயக்கப்போவதை உறுதி செய்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ‘நந்தன்’ படத்தின் புரமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகுமார், “விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார். அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விஜய் அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
விஜயிடம் நான் ஒரு வரலாற்றுக் கதையை கூறினேன். அவருக்கு அது ரொம்ப பிடித்திருந்தது, அவரே சில தயாரிப்பாளர்களைச் சொன்னார். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் பண்ண முடியாமல் போனது. ஈசன் படத்துக்கு பிறகு அப்படத்தை இயக்குவதாக இருந்தது. இப்போது இருக்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் அப்போது இல்லை” என்றார்.