சரத்குமார் மீது தனுஷின் தாயார் வழக்கு @realsarathkumar
சினிமா

சட்டவிரோத ஆக்கிரமிப்பு: சரத்குமார் மீது தனுஷின் தாயார் வழக்கு!

யோகேஷ் குமார்

அடுக்குமாடி குடியிருப்பில் பொதுவான பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் சரத்குமார் மீது தனுஷின் தாய் தாக்கல் செய்த வழக்கில், சரத்குமார் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி. நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் அனைவருக்கும் பொதுவான இடத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகக் கூறி தனுஷின் தாயார் மற்றும் அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு சிலரும் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சரத்குமாருக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்திருந்தனர்.

அந்த மனுவில், அனைவருக்கும் பொதுவான பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், தரைத்தளத்தில் உள்ள பொதுவான பகுதியை நடிகர் சரத்குமார் தனது நிறுவனத்துக்காக வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.