சைந்தவி @singersaindhavi
சினிமா

24 ஆண்டுகால நட்பு தொடரும்: சைந்தவி உருக்கம்

யோகேஷ் குமார்

யூடியூபில் தவறான கருத்துகள் பரப்பப்படுவது வேதனை அளிக்கிறது என பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார்.

தங்களின் 11 வருட திருமண உறவு முடிந்துவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், பாடகி சைந்தவியும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் இது குறித்து ஜி.வி. பிரகாஷ், “ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்” என தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், “இருவரும் சேர்ந்து கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவை எடுத்தோம்” என பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் சைந்தவி கூறியதாவது:

“எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, யூடியூபில் தவறான கருத்துகள் பரப்பப்படுவது வேதனை அளிக்கிறது. நாங்கள் பிரிந்ததற்கு யாரும் காரணம் இல்லை. இருவரும் சேர்ந்து கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவை எடுத்தோம். எந்தவித அடிப்படை ஆதாரமின்றி ஒருவரைப் பற்றி அவதூறு பரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நானும், ஜி.வி. பிரகாஷும் 24 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பள்ளிப் பருவத்தில் இருந்து தொடங்கிய இந்த நட்பு தொடரும்” என்றார்.