சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான், பரிசோதனைகள் முடிந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். ரஹ்மானுக்கு நெஞ்சு வலி, கழுத்து வலி என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் பதற்றம் அடைந்தார்கள்.
ரஹ்மானின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் ஏ.ஆர். ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர் என்றார். இதனால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்தார்கள்.
இந்நிலையில் ரஹ்மானுக்கு என்னவிதமான உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நீர்ச்சத்துக் குறைபாடு உடைய அறிகுறிகளுடன் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஏ.ஆர். ரஹ்மான் இன்று வருகை தந்தார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.