பிரேம்ஜி திருமணம்: வெங்கட் பிரபு வேண்டுகோள் @vp_offl
சினிமா

பிரேம்ஜி திருமணம்: வெங்கட் பிரபு வேண்டுகோள்

யோகேஷ் குமார்

தங்களின் தனியுரிமைக்கு மரியாதை கொடுத்து இருந்த இடத்தில் இருந்தே பிரேம்ஜியின் கல்யாணத்திற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு இயக்குநர் வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகரும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு வரும் ஜூன் 9 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. சமீபத்தில் அவருடைய திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் “இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9 அன்று சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!

‘கோட்’ அப்டேட் விரைவில்” என்றார்.