பார்த்திபன்  @rparthiepan
சினிமா

‘டீன்ஸ்’ படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் புகார்!

யோகேஷ் குமார்

கிராஃபிக்ஸ் பணிகளுக்கு பணம் பெற்றுவிட்டு தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் புகார் அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கும் ‘டீன்ஸ்’ படம் ஜூலை 12 அன்று வெளியாக உள்ளது. இதே நாளில் தான் கமலின் ‘இந்தியன் 2’ படமும் வெளியாகிறது.

இந்நிலையில் ‘டீன்ஸ்’ படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் தன்னிடம் பணம் பெற்றுவிட்டு ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

‘டீன்ஸ்’ படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளரான சிவபிரசாத், கடந்த பிப். 20-க்குள் படத்தின் வேலைகளை முடிப்பதாகக் கூறி பார்த்திபனிடம் ரூ. 68. 50 லட்சத்தை கேட்டுள்ளார்.

அப்போது, ரூ. 42 லட்சம் செலுத்திய பார்த்திபன், குறிப்பிட்ட நேரத்தில் படத்தின் வேலைகளை முடிக்காததால் ஏப். 19 வரை கால நீட்டிப்பு செய்துள்ளார். பிப்ரவரி மாதத்தில் படத்தின் ஒரு பங்கு வேலைகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், குறிப்பிட்ட நேரத்திற்குள் படத்தின் வேலைகளை முடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 4 அன்று மீண்டும் பணம் கேட்டு சிவபிரசாத் பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கிராஃபிக்ஸ் பணிகளுக்கு பணம் பெற்றுவிட்டு தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிவபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.