சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார் அவருடைய மகனான ஏ.ஆர். அமீன்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஹ்மானுக்கு நெஞ்சு வலி, கழுத்து வலி என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் பதற்றம் அடைந்தார்கள்.
ரஹ்மானின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரஹ்மான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர் என்றார். இதனால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்தார்கள்.
இந்நிலையில் ரஹ்மானுக்கு என்னவிதமான உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்து அவருடைய மகனான ஏ.ஆர். அமீன் எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ரசிகர்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் மனப்பூர்வமான நன்றிகள். நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக என் தந்தை சற்று பலவீனமாக உணர்ந்தார். எனவே நாங்கள் அவருக்குச் சில வழக்கமான பரிசோதனைகளை மருத்துவமனையில் செய்தோம். அவர் இப்போது நன்றாக உள்ளார் என்கிற தகவலைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வார்த்தைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.