எம்புரான் படத்துக்கு வலதுசாரிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததையடுத்து, 17 இடங்களில் மாற்றங்களைக் கொண்டு வர படக் குழு திட்டமிட்டுள்ளது.
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 27 அன்று வெளியான திரைப்படம் எம்புரான். படம் வெளியான பிறகு, 2002 குஜராத் கலவரத்துடன் சில காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் ஒத்துப்போவதாக விமர்சனங்கள் வந்தன. படத்திலுள்ள எதிர்மறைக் கதாபாத்திரத்தின் பெயர் பல்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி.
இது குஜராத் கலவரத்தில் தொடர்புடைய பாபுபாய் படேல் என்பவரைக் குறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவருடைய ஆதரவாளர்களால் இவர் பாபு பஜ்ரங்கி என்று தான் அறியப்படுவார். குஜராத் கலவரம் வழக்கில் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். ஆயுள் தண்டனை பெற்ற இவருக்கு மருத்துவக் காரணங்களுக்காகப் பின்னாளில் பிணை வழங்கப்பட்டது.
இப்படம் நாட்டின் உயர் விசாரணை அமைப்புகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், உள்துறை அமைச்சரை கலவரக்காரர் என்று குறிப்பிடும் வகையில் இருப்பதாகவும் ஒரு பிரசாரப் படமாக இது அமைந்துள்ளதாகவும் குரல்கள் வலுத்தன. மோஹன்லாலுக்கு எதிராக விமர்சனங்களை வைக்கத் தொடங்கினார்கள் சிலர்.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து படத்தில் 17 இடங்களில் மாற்றங்களைக் கொண்டு வர படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்மறைக் கதாபாத்திரத்தின் பெயரில் சிறியளவில் மாற்றங்களைக் கொண்டு வர உள்ளார்கள். இதுதொடர்பாக, திரைப்படத் தணிக்கை வாரியத்தை அணுக தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2019-ல் வெளியான லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் தான் எம்புரான். மூன்று பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ள கதைதான் இது.