சினிமா

எதிர்பாராத சூழலால் திருமணம் ஒத்திவைப்பு: ரித்விகா அறிவிப்பு | Marriage | Riythvika | Big Boss

தனக்கும் திருச்சியை சேர்ந்த வினோத் லட்சுமணன் என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக ரித்விகா அறிவித்திருந்தார்.

ராம் அப்பண்ணசாமி

வரும் ஆகஸ்ட் 27 அன்று தனது திருமணம் நடைபெறும் என்று நடிகை ரித்விகா அறிவித்திருந்த நிலையில், எதிர்பாராத காரணங்களால் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அவர் தற்போது அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரித்விகா, இயக்குநர் பாலாவின் பரதேசி மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதன் தொடர்ச்சியாக நினைத்தது யாரோ, மெட்ராஸ், கபாலி, இருமுகன் உள்ளிட்ட பல்வேறு படங்கள் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட நபரானார்.

மெட்ராஸ் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார். இதன் தொடர்ச்சியாக, தமிழ் பிக்பாஸ் 2-ம் பருவத்தில் போட்டியாளராகக் கலந்துகொண்ட ரித்விகா, போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தனக்கும் திருச்சியை சேர்ந்த வினோத் லட்சுமணன் என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகவும், இதை பெற்றோர் ஏற்பாடு செய்ததாகவும் கடந்த மாதம் ரித்விகா அறிவித்தார்.

அத்துடன் `கைத்தலம் பற்றி’ எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டகிராம் கணக்கில் நிச்சயதார்த்தப் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.

தனக்கும், வினோத்திற்கும் வரும் 27-ம் தேதி திருமணம் நடைபெறும் என்று ரித்விகா முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால் எதிர்பாராத காரணங்களால் திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது ரித்விகா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.