ரூ. 60 கோடி மதிப்புடைய மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ராஜ் குந்த்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருவரும் மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் தீபக் கோதாரி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
2015 மற்றும் 2023 ஆகிய காலகட்டத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ராஜ் குந்த்ரா தன்னிடமிருந்து ரூ. 60 கோடியைப் பெற்றதாக தீபக் கோதாரி தெரிவித்துள்ளார். தொழிலை விரிவுபடுத்தவே இந்தப் பயணம் எனப் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட செலவுகளுக்கு இதைப் பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இப்பணம் முதலில் கடனாக வாங்கிக் கொண்டு பிறகு இதை முதலீட்டாக மாற்றியுள்ளார். பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்காக இந்தப் பரிவர்த்தனை நடந்துள்ளது.
ரூ. 60 கோடியானது இரு தவணைகளாக ஏப்ரல் 2015-ல் ரூ. 31.95 கோடியும் செப்டம்பர் 2015-ல் ரூ. 28.53 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.
பணத்தைத் திருப்பி கொடுப்பது குறித்து கடந்த ஏப்ரல் 2016-ல் ஷில்பா ஷெட்டி எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளார். 12% ஆண்டு வட்டியுடன் பணம் திருப்பி கொடுக்கப்படும் என தீபக் கோதாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில மாதங்களிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஷில்பா ஷெட்டி விலகியிருக்கிறார். மேலும், ரூ. 1.28 மதிப்புடைய தீர்க்கப்படாத வழக்கு ஒன்று நிறுவனத்தின் மீது இருந்தது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து முன்கூட்டியே தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் தீபக் கோதாரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ளார்கள்.
இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14 அன்று மும்பை காவல் துறையின் பொருளாதாரக் குற்றங்களுக்கான பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக மும்பை காவல் லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்துள்ளது.
Shilpa Shetty | Raj Kundra | Lookout Notice | Lookout circular