கருணாஸ் 
சினிமா

நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல்: விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு

யோகேஷ் குமார்

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கிக் குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் நடிகர் கருணாஸ் பயணம் செய்ய இருந்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் கருணாஸ் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். பையை ஸ்கேன் செய்தபோது, எச்சரிக்கை அலாரம் ஒலித்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவரது பையை சோதனை செய்து பார்த்ததில், அதில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்த 40 துப்பாக்கிக் குண்டுகளைப் பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். துப்பாக்கி உரிமம் தன்னிடம் உள்ளது என ஆவணங்களை அதிகாரிகளிடம் கருணாஸ் காண்பித்தார். எனினும் கருணாஸின் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். அவசரமாக வந்ததால், பையில் இருந்த துப்பாக்கிக் குண்டுகளை கவனிக்கவில்லை என அதிகாரிகளிடம் கருணாஸ் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள், தோட்டாக்களை கருணாஸிடமே ஒப்படைத்ததாகவும், விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் காரில் பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.