கர்ப்பிணியான தனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் ரூ. 6.5 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து மகளிர் ஆணையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தன்னால் ஆடை வடிவமைப்புப் பணியில் ஈடுபட முடியவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிறக்கப்போகும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதால், மருத்துவச் செலவு, வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ. 6.5 லட்சத்தை அவர் வழங்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
ஜாய் கிரிசில்டாவின் மனு மீதான விசாரணை விரைவில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள ஜாய் கிரிசில்டா தரப்பில் தன்னை அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அக்டோபர் 15 அன்று அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிராக ஜாய் கிரிசில்டா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்தப் பிரச்னையின் ஆரம்பம் முதல் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக மாதம்பட்டி ரங்கராஜுடனான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Joy Crizildaa has filed a fresh petition in the Family Welfare Court seeking ₹6.5 lakh as monthly maintenance from Madhampatty Rangaraj.
Madhampatty Rangaraj | Joy Crizildaa | Family Welfare Court |