ஷங்கர்  
சினிமா

சுஜாதா எனக்கு அப்பா மாதிரி: ஷங்கர்

1998 - 2007 வரை ஜீன்ஸ் தவிர முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என ஷங்கரின் அனைத்துப் படங்களுக்கும் சுஜாதா தான் வசனம் எழுதினார்.

யோகேஷ் குமார்

எழுத்தாளர் சுஜாதாவை மிகவும் மிஸ் செய்வதாக இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவாகி உள்ளது. இப்படம் ஜூலை 12-ல் வெளியாகவுள்ளது.

ஷங்கர் படங்களின் வசனங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் 1996-ல் வெளியான இந்தியன் படத்துக்கு சுஜாதா வசனம் எழுதினார். அதுவே இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம்.

இதன் பிறகு தொடர்ச்சியாக 1998 - 2007 வரை ஜீன்ஸ் தவிர முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என ஷங்கரின் அனைத்துப் படங்களுக்கும் சுஜாதா தான் வசனம் எழுதினார். ஜீன்ஸ் படத்துக்கு வசனம் - பாலகுமாரன். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு ஜெயமோகன், சுபா, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் ஆகியோர் ஷங்கருடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள்.

சுஜாதாவின் மறைவுக்கு பிறகு ஷங்கரின் படங்களில் வசனங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷங்கர், “சுஜாதா எனக்கு அப்பா போன்றவர். அவரும் என்னை தனது மகனை போலத்தான் நடத்தினார். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்றார்.