‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்! 
சினிமா

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

யோகேஷ் குமார்

மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதாக கூறி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த பிப். 22 அன்று மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம், உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இந்த இலக்கை எட்டிய முதல் மலையாளப் படம் எனும் பெருமையை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் குணா பட பாடலான ‘கண்மனி அன்போடு காதலன்’ பாடல் பயன்படுத்தப்பட்டது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில், இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். எனவே அவரிடம் பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும், அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.

இப்பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும், இல்லையெனில் பதிப்புரிமையை வேண்டும் என்றே மீறியதாக கருதி உரிமையியல் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.