குட் பேட் அக்லி படத்தில் தன் அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அகில் படம், கடந்த ஏப்ரல் 10- ல் வெளியானது. இதில், திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது சர்ச்சை ஆனது. ’என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபா தாரேன்’ ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய அனுமதி இன்றி இந்த மூன்று பாடல்களைப் பயன்படுத்தியதைக் கண்டித்து இசையமைப்பாளர் இளையராஜா தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை கடந்த ஏப்ரலில் அனுப்பினார்.
இளையராஜா அனுப்பி இருந்த நோட்டீஸில் தன்னுடைய அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தி உள்ளதால், ரூ. 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குச் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றுவிட்டோம் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தரப்பு பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, குட் பேட் அக்லி படத்தில் தனது அனுமதியின்றி தனது 3 பாடல்களைப் பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்று இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது மனுவில், தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்றதாகக் குறிப்பிட்டுள்ள சட்டப்பூர்வ உரிமையாளர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 8-ல் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
Good Bad Ugly | Ilaiyaraja | Ajith Kumar | Adhik Ravichandran |