சினிமா

உங்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்: அஜித்

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது.

ராம் அப்பண்ணசாமி

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டு, பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் அஜித்.

துபாயில் நடைபெற்ற 24 ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில், 991 பிரிவில் அஜித்தின் `அஜித்குமார் ரேஸிங்’ அணி 3-வது இடத்தைப் பிடித்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியைத் தன் அணியினருடன் அஜித் குமார் கொண்டாடும் காணொளிகள் வெளியாகி சமூக வலைதளங்கில் வைரலானது.

தமிழக அரசியல் பிரமுகர்கள், திரையுலத்தினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், பொங்கல் திருநாளான இன்று (ஜன.14) காலை அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

`துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது.

இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களை பற்றியதுதான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துகள்” என்றார்.