11 வருட திருமண உறவு முடிந்தது: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு  @singersaindhavi
சினிமா

11 வருட திருமண உறவு முடிந்தது: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு

யோகேஷ் குமார்

தங்களின் 11 வருட திருமண உறவு முடிந்துவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், பாடகி சைந்தவியும் அறிவித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவியை கடந்த 2013-ல் திருமணம் செய்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு. இருவரும் சேர்ந்து பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் தங்களின் 11 வருட திருமண உறவு முடிந்துவிட்டதாக தங்களது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“11 வருட திருமண உறவுக்கு பிறகு நாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளோம். மன அமைதிக்காகவும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதையைக் கருதியும் இந்த முடிவை எடுத்துள்ளோம். செய்தியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவரும் இந்த முக்கியமான நேரத்தில் எங்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவே சிறந்த முடிவு என நம்புகிறோம். இந்த கஷ்டமான சூழலில் உங்களின் ஆதரவை முக்கியமாகக் கருதுகிறோம்” என்றார்.