கவுண்டமணி 
சினிமா

ரூ. 50 கோடி நிலத்தை ஒருவழியாக மீட்ட கவுண்டமணி!

யோகேஷ் குமார்

20 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்திற்கு பிறகு தனக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் 1996-ல் கவுண்டமணி, நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான ஐந்து கிரவுண்டு நிலத்தை விலைக்கு வாங்கினார்.

அதனை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதில் 22700 சதுர பரப்பளவிலான வணிக வளாகத்தை கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கவுண்டமணி 1996 முதல் 1999 வரை ரூ. 1 கோடியே 4 லட்சம் பணத்தை கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 2003 வரை கட்டுமான பணிகள் தொடங்கப்படாத நிலையில், இது தொடர்பாக கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கவுண்டமணியிடம் பெற்ற நிலத்தை அவரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், 2008-ம் ஆண்டு முதல், மாதம் ஒன்றுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் தரவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் கவுண்டமணிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தனியார் கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இதைத் தொடர்ந்து மே 14 அன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கவுண்டமணியின் நிலத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கவுண்டமணியிடம் அவரது நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்திற்கு பிறகு தனக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.

நீதிமன்ற ஊழியர்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பாளர்களையும் அவர்களின் உடைமைகளையும் அகற்றி ஏறத்தாழ ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.