இளையராஜா தன் பாடல்கள் இடம்பெற்ற படங்களுக்கு எதிராக காப்புரிமை வழக்குப் போடுவது ஏன் என்ற கேள்விக்கு அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பதிலளித்துள்ளார்.
சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“படங்களில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த தயாரிப்பாளர்கள் வந்து கேட்டால் அவர் கொடுத்துவிடுவார். அவர்களும் அதற்கான நன்றியைப் படத்தில் பதிவு செய்துவிடுவார்கள். ஆனால் கேட்காமல் பயன்படுத்தும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. நம் பாடல்கள் பிரபலமடைவது நமக்கு நல்லதுதான் ஆனால் வந்து அனுமதி கேட்டுவிட்டு, நன்றி என்ற வாசகத்தைப் போடுவதற்கு என்ன? அதை ஏன் செய்வதில்லை? எங்களை மதிக்காமல் இருப்பது சரியா? காப்புரிமை என்பது பாடலை இசையமைத்தவர்களுக்கான உரிமை. அப்படித்தான் எல்லா இசையமைப்பாளர்களும் வாங்கி வைத்திருக்கிறார்கள். மேடைகளில் இளையராஜா பாடல்களைப் பாடுவது குறித்த சர்ச்சை வந்தபோது நான் அவரிடம் பேசினேன். அதன்பிறகு மெல்லிசைக் கலைஞர்கள் பாட இளையராஜா அனுமதி அளித்தார்.
படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வதேச அளவில் இருக்கும் சலுகை. இந்தியாவில் அமிதப் பச்சன் கூட அப்படிச் செய்திருக்கிறார். ஏனென்றால் படங்களைப் பயன்படுத்தி, தவறான திரிதல்களுடன் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கும்போது முகமே நகைச்சுவையாக மாறிவிடுகிறது. அது நன்றாக இல்லை என்பதால் அப்படிச் சொல்லப்பட்டது. செயற்கை நுண்ணறிவுக்கு நாம் அடிமை ஆனோம் என்றால் நமது மூளை வேலை செய்யாது.
தயாரிப்பாளருக்கோ இயக்குநருக்கோ படத்தில் குறிப்பிட்ட இடத்தில் இளையராஜா பாட்டு போல் ஒரு பாடல் வேண்டும் என்றால் அதை அவர்கள் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளரிடம் கேட்டால் போட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இடம்கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை” என்றார்.
Ilayaraaja's brother and music composer Gangai Ameran has responded to the question of why he is filing copyright lawsuits against films featuring his songs.