நடிகை குறித்து தான் தவறாகப் பேசவில்லை என்றும், மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து ஏ.வி. ராஜு பேசிய காணொளி சமூக ஊடகங்களில் காலை முதல் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதற்காக சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என த்ரிஷா அறிவித்தார். இந்த நிலையில், நடிகை குறித்து பேசியதற்காக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள காணொளியில் அவர் கூறியதாவது:
"சமூகவலைதளங்களில் என் மீது அவதூறான செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியை நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் (அரசியல் பிரமுகர்) சொன்னதாகவே, அந்தச் செய்தியை நான் சொன்னேன். மீண்டும் அவர் (அரசியல் பிரமுகர்) பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை.
அவரைப் பற்றி எந்த இடத்திலும் நான் விமர்சனத்துக்குக் கொண்டு வரவில்லை. செய்தியை மற்ற இடத்தில் பேசும்போதுகூட, இவர்களுக்கு அதில் தொடர்பில்லை. எனக்கும், அவருக்கும் (அரசியல் பிரமுகர்) அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சி இருந்தது. எந்த இடத்திலும் திரைப்பட நடிகையையோ, வேறு யாரையோ நான் சொல்லவில்லை. இதைத் தவறாக சித்தரித்து காண்பித்து வருகிறார்கள். திரைப்பட இயக்குநர்கள் சேரன், ஆர்.கே. செல்வமணி மற்றும் த்ரிஷா ஆகியோருக்கு எனது பணிவான வேண்டுகோள், ஒருவேளை உங்களுடைய மனது புண்பட்டிருந்தால், சமூக வலைதளங்கள் மூலம் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.