மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்.
கடந்த 2015-ல் இயக்குநர் மணிகண்டனின் காக்கா முட்டை படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் சுரேஷ் சங்கையா. அதன்பிறகு சுரேஷ் சங்கையாவின் இயக்கத்தில் அவரது முதல் படமாக 2017-ல் வெளியானது ஒரு கிடாயின் கருணை மனு. விதார்த், ரவீனா ரவி ஆகியோரின் நடிப்பில் விருதுநகர் மாவட்டத்தைக் கதைக்களமாக கொண்ட இந்த படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
இதனை அடுத்து, பிரேம்ஜி அமரன், ஞானசம்மந்தம் ஆகியோர் நடிப்பில் சுரேஷ் சங்கையாவின் 2-வது படமான சத்திய சோதனை சோனி லிவ் ஓடிடியில் வெளியாகி கவனம் பெற்றது. யோகிபாபுவின் நடிப்பில் தனது அடுத்த படத்தைத் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சங்கையா, அதனால் ஏற்பட்ட கல்லீரல் கோளாறுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.15) இரவு 11 மணியளவில் அவர் காலமானார்.
சுரேஷ் சங்கையாவுக்கு திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.