துஷாரா விஜயன் @dushara_vijayan
சினிமா

35 வயதுக்குப் பிறகு நடிப்பை விட்டுவிடுவேன்: நடிகை துஷாரா விஜயன்

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படம் ஜூலை 26-ல் வெளியாக உள்ளது.

யோகேஷ் குமார்

தனக்கு என்ன வேண்டும் என்பதை நடிகர்களிடம் இருந்து தனுஷ் சரியாக பெற்றுக்கொள்வார் என துஷாரா விஜயன் பேசியுள்ளார்.

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படம் ஜூலை 26-ல் வெளியாக உள்ளது.

தனுஷின் 50-வது படமான ராயனில் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உட்பட பலரும் நடித்துள்ளனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக துஷாரா விஜயன், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“நான் மிகப்பெரிய தனுஷ் ரசிகை. அவருடன் சேர்ந்து நடிப்பது பாட்ஷா படத்தின் இடைவேளைக் காட்சி போன்று உள்ளது. இது எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக கருதுகிறேன்.

தனக்கு என்ன வேண்டும் என்பதை நடிகர்களிடம் இருந்து தனுஷ் சரியாக பெற்றுக்கொள்வார். மற்ற இயக்குநர்களுடன் ஒப்பிடும் போது தனுஷுடன் பணியாற்றியது வித்தியாசமாக இருந்தது. ஒரு பிடி மண்னைக் கூட அவர் நடிக்க வைப்பார்.

இப்படத்தில் நான் வடசென்னையில் பிறந்து, அங்கே வாழ்ந்து, அங்கேயே மறையும் ஒரு பெண்ணாக நடித்துள்ளேன். சார்பட்டா பரம்பரையில் நடித்த மாரியம்மா கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பேனா என்று தெரியவில்லை.

ஒரு படத்தில் என்னுடைய காட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும், அது ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். என்னுடைய கதாபாத்திரம் பிடிக்காமல் போயிருந்தால் ராயன், வேட்டையன், வீர தீர சூரன் போன்ற பெரிய நடிகர்களின் படங்களையும் நிராகரித்திருப்பேன்.

35 வயதுக்குப் பிறகு நடிப்பை விட்டுவிடுவேன். அதற்காக மீண்டும் நடிக்க வரமாட்டேன் என்று கூறவில்லை, ஆனால் உலகம் முழுக்க உள்ள அனைத்து நாடுகளுக்கும் செல்லவேண்டும் என்பதே என்னுடைய இலக்கு” என்றார்.