சினிமா

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்! | Velu Prabhakaran

உடல்நிலை மோசமடைந்ததால், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருந்தது.

ராம் அப்பண்ணசாமி

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் வேலு பிரபாகரன் இன்று (ஜூலை 18) காலமானார்.

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான வேலு பிரபாகரன், `நாளைய மனிதன்’ படத்தின் மூலம் 1989-ல் இயக்குநராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1990-ல் அவரது இயக்கத்தில் உருவான `அதிசய மனிதன்’ படம் வெளியானது.

வேலு பிரபாகரனின் இயக்கத்தில் வெளியான அசுரன், ராஜாளி ஆகிய படங்களுக்கு இயக்குநர் ஆர்.கே. செல்வமணி திரைக்கதை எழுதியிருந்தார். இயக்கம் மட்டுமல்லாமல், நடிப்பிலும் அவர் கவனம் செலுத்தினார். நாளைய பொழுது உன்னோடு, ஒரு இயக்குநரின் காதல் டைரி, ஜாங்கோ, கடாவர், ரெய்டு, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

68 வயதான வேலு பிரபாகரன் அண்மையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதை ஒட்டி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை மோசமடைந்ததால், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று (ஜூலை 17) செய்தி வெளியானது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 18) காலை அவர் உயிரிழந்தார்.