பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி உடல்நலக்குறைவால் இன்று (ஏப்.15) காலமானார்.
இயக்குநர்கள் மகேந்திரன், சசி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.எஸ். ஸ்டான்லி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், சினேகா ஆகியோர் நடித்திருந்த `ஏப்ரல் மாதத்தில் (2002)’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன்பிறகு, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2004), மெர்குரி பூக்கள் (2006), கிழக்கு கடற்கரை சாலை (2006) ஆகிய படங்களை இயக்கினார்.
அதைத் தொடர்ந்து பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, கடுகு, சர்க்கார், பொம்மை நாயகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர் நடத்தார். கடைசியாக விஜய் சேதுபதியின் மஹாராஜா படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், 58 வயதான ஸ்டான்லி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகள், இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லியின் மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.