படம்: https://www.instagram.com/nelsondilipkumar/ 
சினிமா

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக விசாரணையா?: இயக்குநர் நெல்சன் மறுப்பு

கிழக்கு நியூஸ்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தொடர்பாக தன்னிடம் எந்த விசாரணையும் நடைபெறவில்லை என இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது. இவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 75 லட்சம் வரை பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் தகவல்கள் கசிந்தன. இதற்கு மோனிஷா ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் நெல்சனிடம் காவல் துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை, யாரும் எனக்கு எந்த அழைப்பாணையும் அனுப்பவில்லை என்றும் நெல்சன் கூறியுள்ளார்.