ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவது குறித்த சில தகவல்களைப் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
தொலைக்காட்சித் தொகுப்பாளரான கோபிநாத், யூடியூப் சேனலுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் பேட்டி கண்டுள்ளார். அப்போது ரஜினியின் 171-வது படம் குறித்து லோகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:
லியோ படம் முடிந்த பிறகு நான் தனிப்பட்ட முறையில் நேரத்தை செலவழித்தேன். இன்னும் நான்கு மாதங்களில் கதையை எழுதிவிடுவேன். எனக்கு அந்த நேரம் போதுமானது. ஏப்ரல் மாதத்தில் இருந்து படப்பிடிப்பைத் தொடங்குவோம். ஒவ்வொரு முறையும் இப்படத்தைப் பற்றி பேசும்போது நடிகர் ரஜினி சார் ஆவலாக இருப்பார். இந்தப் படம் முழு ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டதாக இருக்கும். இதற்கு முன்பு வெளிவந்த ரஜினியின் படங்களை விட வித்தியாசமாக இருக்கும். நான் அவரிடம் கதை சொல்லி முடித்த பிறகு அவர் என்னை அணைத்துக்கொண்டார். அத்தருணம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தைப் பற்றி இனி வரும் காலங்களில் தான் நிறைய பேச முடியும். தற்போது சொல்ல எதுவுமில்லை. ஏனென்றால் நான் சொல்லாத விஷயங்களை, ஒரு சிலர் நான் சொன்னது போல் சொல்லிவிடுகிறார்கள் என்றார்.