கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குநர் சேரன் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன்.
இவர் சமீபத்தில் கடலூர் மாவட்டம் வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அதிக ஒலி எழுப்பிக் கொண்டே வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையின் நடுவே நிறுத்தி கீழே இறங்கினார். பேருந்து ஓட்டுநரும் கிழே இறங்க அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவர்களை சமாதானம் செய்ய, சேரன் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதன் பிறகு கடலூரில் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதாகக் கூறி ரூ. 10000 அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடலூர் தனியார் பேருந்து சங்கத்தினர் சேரன் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படுவது மின்சார ஹாரன் தான், ஏர் ஹாரன் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளனர்.