அஜித் - சிரஞ்சீவி சந்திப்பு @chiranjeevikonidela
சினிமா

அஜித்துடன் சந்திப்பு: நினைவுகளைப் பகிர்ந்த சிரஞ்சீவி!

யோகேஷ் குமார்

இத்தனை ஆண்டுகளில் அஜித் அடைந்திருக்கும் உயர்வை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ‘விஸ்வம்பரா’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இருவரின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித், சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து சிரஞ்சீவி கூறியதாவது: “எதிர்பாராத வகையில் இருவரும் சந்தித்தோம். மிகவும் அன்பான அஜித் படப்பிடிப்பிலிருந்து வந்து என்னை நேரில் சந்தித்தார். நாங்கள் இருவரும் சிறிது நேரம் பேசினோம். அவரது முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் இசையை நான் வெளியிட்டேன். மேலும் அவரது அன்பான மனைவி ஷாலினி, நான் நடித்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அஜித் அடைந்திருக்கும் உயர்வை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் அவர் மாறாமல் அதே அன்போடு இருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.