@RKFI
சினிமா

அமரன் படக்குழுவினரை வாழ்த்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்!

இந்தச் சந்திப்பு தேசபக்தி உணர்வுடன் நடைபெற்றது.

யோகேஷ் குமார்

அமரன் படக்குழுவினர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த அமரன் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்தார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராகவே வாழ்ந்திருக்கிறார் என்று பலரும் பாராட்டிய நிலையில், அவரை முகுந்த் வரதராஜன் பயிற்சி பெற்ற ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி எனப்படும் ராணுவப் பயிற்சி மையம் கெளரவித்தது.

இந்நிலையில் அமரன் படக்குழுவினர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

இது குறித்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம், “அமரன் படக்குழுவினர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்ததில் பெருமை அடைகிறோம். அமரன் படத்தின் வெற்றிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால் இந்தச் சந்திப்பு தேசபக்தி உணர்வுடன் நடைபெற்றது” என்று தெரிவித்துள்ளது.