கன்னட நடிகர் தர்ஷன் கைது 
சினிமா

இளைஞர் கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷன் கைது

யோகேஷ் குமார்

ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலையில் நடிகர் தர்ஷனுக்கும் பங்கு இருப்பதாக சந்தேகம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் தர்ஷனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தர்ஷனுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக தர்ஷனின் மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

முன்னதாக, தர்ஷனின் மனைவிக்கு ரேணுகா சுவாமி தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.