@SureshChandraa
சினிமா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்

கிழக்கு நியூஸ்

நரம்பு வீக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித் குமார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

நடிகர் அஜித் குமார் கடந்த வியாழக்கிழமை வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அவரது சிகிச்சை குறித்து வதந்திகள் பரவத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து, அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஸூம் செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்து அஜித்தின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.

காதிலிருந்து மூளையை இணைக்கும் நரம்பில் வீக்கம் இருந்ததாகவும், இதை மருத்துவர்கள் பரிசோதனை செய்து குணப்படுத்தியதாகவும் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். மேலும் வெள்ளிக்கிழமையே தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு அஜித் மாறி வந்துவிட்டதாகவும், வெள்ளி இரவு அல்லது சனி காலை அவர் வீடு திரும்புவார் என்றும் ஸூமுக்கு அளித்த பேட்டியில் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில், அஜித் குமார் சனிக்கிழமை காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.