அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அஜித் குமாரின் கடைசியாக நடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அஜித் குமார் நடித்த படம் இது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கினார்.
இப்படத்தைத் தொடர்ந்து, கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். இதனால், அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என அஜித் குமார் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். எனினும், அவருடைய அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில், குட் பேட் அக்லியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்தப் படத்தை தான் இயக்கப்போவதாக ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழ் ஜனத்துக்கு அளித்த பேட்டியில், "அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷம். செய்ததையே திரும்பச் செய்யக் கூடாது. குட் பேட் அக்லியிலிருந்து மாறுபட்ட படத்தை உருவாக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அதிகாரபூர்வமாக விரைவில் வரும்" என்றார் ஆதிக் ரவிச்சந்திரன்.
முன்பொரு நேர்காணலில் அஜித் குமார் கூறியபடி, "நவம்பர் முதல் பிப்ரவரி காலகட்டத்தில் ஒரு படத்தை செய்ய முடிந்தால், ஆண்டுதோறும் பிப்ரவரியில் என் படம் வெளியாகும். நானும் கார் பந்தயத்துக்குத் தயாராகலாம். நவம்பரில் புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளேன். இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதம் வெளியாகும் என நினைக்கிறேன்" என்றார்.
Good Bad Ugly | Ajith Kumar | Aadhik Ravichandran |