ANI
வணிகம்

ஏடிஎம்மில் பணம் எடுப்பவரா?: மே 1-ல் இருந்து புதிய கட்டணம் அமல்!

பிற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்தி மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் அதிகபட்சம் 5 முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்.

ராம் அப்பண்ணசாமி

ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணங்கள், வரும் மே 1, 2025 முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய வங்கி விதிகள் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி, தற்போது அமலில் உள்ள வரம்பைத் தாண்டிப் பணம் எடுக்கும்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் உயரவுள்ளது.

தற்போதைய அமலில் உள்ள நடைமுறையின்படி, வங்கி வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 5 முறை கட்டணமின்றி தங்கள் வங்கியின் ஏடிஎம் சேவையைச் பயன்படுத்தலாம். பணம் எடுத்தல், இருப்பு தொகையை அறிதல் போன்றவற்றுக்காக ஏடிஎம்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேநேரம், 5 முறைக்கு மேல் ஏடிஎம் சேவையைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ. 21 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை வரும் மே 1-ம் தேதி முதல் ரூ. 23 ஆக அதிகரிக்க, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.

மேலும், பிற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்தி மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் அதிகபட்சம் 5 முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுப்பது உள்ளிட்ட பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம்.

இனி இவற்றிலும் கட்டணமில்லா பரிவர்த்தனைகளின் வரம்பைத் தாண்டிய பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும்.