வணிகம்

விரைவில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: கௌதம் அதானி நம்பிக்கை!

இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில், நாட்டின் எரிசக்தித்துறை முக்கியப் பங்காற்ற இருக்கிறது

ராம் அப்பண்ணசாமி

`2031-2032 நிதியாண்டில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சியடையும். இதைச் சாத்தியப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் நாட்டில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என கிரிசில் ரேட்டிங் நடத்தும் வருடாந்திர உள்கட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றினார் தொழிலதிபர் கவுதம் அதானி.

`இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில், நாட்டின் எரிசக்தித்துறை முக்கியப் பங்காற்ற இருக்கிறது. வரும் காலங்களில் உள்கட்டமைப்பு சார்ந்து மேற்கொள்ளப்படும் செலவீனங்களில் நான்கில் ஒரு பங்கு எரிசக்தித்துறையில் பயன்படுத்தப்படவுள்ளது. உள் கட்டமைப்பு மீது 2.5 டிரில்லியன் டாலர்கள் செலவிடப்பட உள்ளது. இந்த மொத்த செலவீனத்தில் 25 சதவீதம் அளவுக்கு எரிசக்தி மற்றும் எரிசக்தி மாற்றத்தில் செலவிடப்படும்’ என எரிசக்தித் துறையில் இருக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்துத் தன் உரையில் மேற்கோள்காட்டினார் அதானி.

`நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு `பசுமை மின் அணு’ பிரதானப் பங்காற்ற இருக்கிறது. வரப்போகும் காலங்களில் பசுமை மின் அணுவுக்கான சந்தையின் வளர்ச்சிக்கு எல்லை இருக்கப்போவதில்லை. உலகின் மலிவான பசுமை மின் அணுவை நாம் தயாரிப்போம், அது பல துறைகளுக்கான மூலப்பொருளாக இருக்கப்போகிறது’ என பசுமை எரிசக்தி குறித்து அவர் பேசினார்.

`தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1991 முதல் 2014 வரையிலான வருடங்களில் அடித்தளங்கள் அமைக்கப்பட்டு ஓடுபாதை கட்டப்பட்டது என்றால், 2014 முதல் 2024 வரையிலான வருடங்களில் விமானம் வானை நோக்கிப் புறப்பட்டது. கடந்த ஒரு தசாப்தமாக அரசின் `நிர்வாகத் தரம்’ மேம்பட்டுள்ளதே இந்த புறப்பாட்டைச் சாத்தியமாக்கியுள்ள மிக முக்கியக் காரணி’ என உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான காரணமாக அரசு நிர்வாகத்தைக் குறிப்பிட்டு கௌதம் அதானி மாநாட்டில் பேசியுள்ளார்.