பெர்பிளெக்ஸிட்டியின் நிறுவனரும் தலைமைச் செயல் அலுவலருமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31) இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சென்னையில் பிறந்த இவருடைய சொத்து மதிப்பு ரூ. 21,190 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
2025-ம் ஆண்டின் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலை எம்3எம் ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6% சரிவைச் சந்தித்தாலும் கௌதம் அதானியை முந்தி முதலிடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 9.55 லட்சம் கோடி. கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ. 8.14 லட்சம் கோடி.
ரோஷ்னி நாடார் ரூ. 2.84 லட்சம் கோடியுடன் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்துள்ளார். இதன்மூலம், இந்தியாவிலேயே கோடீஸ்வர பெண் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் தான் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இடம்பெற்றுள்ளார். 31 வயதில் ரூ. 21,190 கோடி சொத்து மதிப்பைக் கொண்டுள்ளதன் மூலம், இந்தியாவில் இவர் தான் தற்போது இளம் கோடீஸ்வரராக உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக 31 வயது ரிதேஷ் அகர்வால் (பிரிஸம்/ஓயோ) உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 14,400 கோடி. ரிதேஷ் அகர்வாலுக்கு அடுத்து ஸெப்டோ இணை நிறுவனர்கள் கைவல்யா வோரா (22), ஆதித் பலிச்சா (23) ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு ரூ. 5,380 கோடி. கைவல்யா வோராவின் சொத்து மதிப்பு ரூ. 4,480 கோடி.
27 வயதுடைய ஷாஷ்வாத் நக்ரானி (பாரத்பே) சொத்து மதிப்பு ரூ. 1,340 கோடி. 30 வயதுடைய ட்ரிஷ்னீத் அரோரா (டிஏசி செக்யூரிட்டி) சொத்து மதிப்பு ரூ. 1,820 கோடி.
யார் இந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்?
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ஜூன் 7, 1994-ல் சென்னையில் பிறந்தார். ஐஐடி மெட்ராஸில் படித்த இவர், 2021-ல் பெர்க்லெ காலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஓபன் ஏஐ, டீப்மைன்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். ஆகஸ்ட் 2022-ல் இணை நிறுவனராக பெர்பிளெக்ஸிட்டி ஏஐ-ஐ நிறுவினார். இது இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவே இப்பெரும் வளர்ச்சிக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
Aravind Srinivas | Perplexity AI | Young Billionaire in India | India's young billionaire | Hurun India |